Kuwait News
Kuwait News/block-2
குவைத்தில் தனது மனைவியை திட்டமிட்டு உயிர் போகும் வரையில் சுத்தியலால் அடித்து கொடூரமாக கொன்ற வழக்கில் இந்தியருக்கு இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது
Image : குவைத் நீதிமன்ற வளாகம்
குவைத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததற்காக இந்தியருக்கு இன்று(11/12/25) வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நயீப் அல்-டஹூம் தலைமையிலான அமர்வு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொலையாளிக்கும் அவரது மனைவிக்கும் இடையே பணப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டதன் விளைவாக ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டுச் செலவுகளுக்கு மற்றும் உணவை வாங்கவும் பணம் சரியாக வழங்காத காரணத்தால், செலவை ஆளுக்கு பாதி என்ற அளவில் சரிசமமாக செலவு செய்யலாம் என்று உயிரிழந்த மனைவி கூறியதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் சமரசம் ஆனது மாதிரி நடித்து, சால்மி பாலைவன பகுதிக்கு அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்து மனைவியை கொலை செய்தார்.
மேலும் உயிர் போகும் வரையில் குற்றவாளி உயிரிழந்த தன்னுடைய மனைவியை தொடர்ந்து சுத்தியலால் தாக்கியதாகவும் குற்றவாளி காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டிருந்தார். எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொடூரமான கொலை என்பதை உறுதி செய்த நீதிபதி கணவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். உயிரிழந்த மனைவி மற்றும் குற்றவாளியான கணவன் இருவரும் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.
Indian Worker | Killing Wife | Kuwait Court
பேரிடர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கையின் புனரமைப்பு பணிகளுக்கான பிரபல லுலு குழும தலைவர் 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ள நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது
Image : யூசுப் அலி காசோலையினை வழங்கிய காட்சி
இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு 1,00,000 அமெரிக்க டாலர்களை(இலங்கை ரூபாய் மதிப்பில் 3 கோடி ரூபாய்) வழங்கியதற்காக லுலு குழும நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூசுப் அலி அவர்களுக்கு அமீரகதற்கான இலங்கை தூதரகம் நன்றியைத் தெரிவித்துள்ளது .
அவருடைய பங்களிப்பு இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், இந்தப் பங்களிப்பு லுலு குழுமத்தின் கருணை மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடந்து வழங்கும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தூதரகம் தெரிவித்துள்ளது.
Srilanka Workers | Yusufali Lulu | Srilanka Flood
குவைத்தில் இன்று காலையில் மண்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து நடந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது
Image : மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்
குவைத்தின் அல்-ராய் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்திற்குள் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
Image: மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்
இன்று(09/12/25) செவ்வாய்க்கிழமை காலையில் நடந்த இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த ஷுவாய்க் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த துயரமான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுடைய உடல்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன.
மேலும் கட்டிடத்தின் கீழ் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தலைமையில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்த தொழிலாளர்கள் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.
Indian Workers | Kuwait Accident | Gulf Worker
குவைத்திலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இந்திய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது
Image : உயிரிழந்த இளைஞர் பிருத்விராஜ்
குவைத்தில் வேலை செய்து வந்த பிருத்விராஜ்(27) என்ற இந்திய இளைஞர் சொந்த ஊரில் நேற்றிரவு நடந்த விபத்தில் மரணமடைந்தார். இவர் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முண்டூரைச் சேர்ந்தவர் ஆவார். பாலக்காடு கண்ணாடி அடுத்த லுலு மால் அருகே வைத்து நேற்று(02/12/25) செவ்வாய்க்கிழமை இரவு 11:00 மணி அளவில் நடந்த வாகன விபத்தில் சிக்கி கொண்டார்.
குவைத்தில் கடந்த பல வருடங்களாக வேலை செய்து வந்த பிருத்விராஜ், துபாய்க்கு வேலை மாற்றம் கிடைத்ததை தொடர்ந்து, விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில் விபத்தில் சிக்கி கொண்டார். இவருடைய தந்தை ஹரிதாசன் முத்து குவைத்திலுள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். மகனின் மரண செய்தி அறிந்த அவர் இன்று(03/12/25) புதன்கிழமை இரவு ஊருக்கு திரும்புகிறார்.
Indian Worker | Road Accident | Kuwait Worker
சவுதியில் பேருந்தும்-பெட்ரோல் டேங்கர் லாரியும் மோதி தீப்பிடித்த துயரமான விபத்தில் 42 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது
Image : பேருந்து தீ பிடித்து எரிந்த காட்சிகள்
இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்தும் பெட்ரோல் ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி இந்த துயரமான விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. யாத்திரிகர்கள் மக்காவில் தங்கள் புனித கடன்களை முடித்துவிட்டு மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். விபத்து நடந்தபோது நள்ளிரவு என்பதால் அனைத்து பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று(17/11/25) அதிகாலையில் சுமார் 1 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டது. பேருந்தில் 43 இந்தியர்கள் இருந்தனர். இதில் முகமது சுஹப்த்(26) என்ற இளைஞர் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். மீதியுள்ள 42 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்ட அடுத்த நொடியில் பெரிய வெடிகுண்டு வெடித்து சிதறியது போன்று எழுந்த தீ பிழம்பில் சிக்கிய அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும், எங்களால் எந்த மீட்பு நடவடிக்கையும் மேற்கோள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கண்ணிர் மல்க தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கியவர்களில் 20 பெண்கள்,11 குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் 4 பேர், மீதியுள்ளவர்கள் இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் ஆவார்கள். உயிரிழந்தவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்ற கூடுதல் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. 43 பேருமே ஒரு ஏஜென்சி வழியாக இந்தியாவில் இருந்து புனிதப்பயணம் மேற்கொள்ள வந்தவர்கள் ஆவார்கள். விபத்துக்கான காரணம் குறித்த கூடுதல் விபரங்கள் வரும் மணிநேரங்களில் வெளியாகும்.
இதற்கிடையே உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக்க தேவையான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்கள் மதினாவில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை, இவர்களை அழைத்து வந்த ஏஜென்சி மற்றும் சவுதி இந்திய தூதரகம் ஆகியவை ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.
மதீனா பேருந்து விபத்தை தொடர்ந்து குடும்பத்தினரும் உதவ ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கட்டுபாட்டு அறையினை திறந்துள்ளது. 8002440003 (கட்டணமில்லா),0122614093,0126614276 0556122301(WhatsApp).தெலுங்கானா அரசும் கட்டண அறையினை திறந்துள்ளது +91 7997959754,+91 9912919545.
Indian Visitors | Saudi Accident | Today Accident
குவைத்தில் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்தது மற்றும் அரசு மானிய விலையில் கிடைக்கும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் 4 இந்தியர்கள் மற்றும் 4 வங்காளதேச நாட்டவர்கள் உட்பட 8 பேர் கைதாகியுள்ளனர்
Image : அதிகாரிகளிடம் சிக்கிய கும்பல்
குவைத்தில் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்தது மற்றும் அரசு மானிய விலையில் கிடைக்கும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் 4 இந்தியர்கள் மற்றும் 4 வங்காளதேச நாட்டவர்கள் உட்பட 8 பேர் கைதாகியுள்ளனர். 4 வங்காளதேச நாட்டவரில் ஒருவர் சுகாதாரத்துறை ஊழியர் ஆவார். Farwaniya பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்தது மற்றும் மருந்துகளை விற்பனை செய்வது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை இரகசிய பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து இந்த இடத்தை கைப்பற்ற முடிந்தது என்றும், இங்கிருந்து இந்திய நாட்டவரான நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் எனவும், அவர்களில் ஒருவர் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்து வருவது கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் மற்ற மூவரும் சிகிச்சை பெறுவதற்காக உரிமம் பெறாத மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வருவதும் கண்டறியப்பட்டது என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் பணத்திற்காக அரசாங்க மருந்துகளை சட்டவிரோதமாக எடுத்து வந்து விற்பனை செய்த 3 பேர் அடங்கிய வங்காளதேச நாட்டவரான மற்றொரு கும்பலையும் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையில் அரசு சுகாதார மையங்களில் ஒன்றில் பணிபுரியும் வங்காளதேச நாட்டவர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து மருந்துகளைத் திருடி விற்பனை செய்வதற்காக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்து அவரையும் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இந்தியா மற்றும் வங்காளதேச நாட்டினரின் எண்ணிக்கை 8 ஆகியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளை சுகாதார அமைச்சகத்தின் மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. நாட்டில் நடைபெறும் சட்டவிரோத மருத்துவ சேவைகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு இயக்குநரக விவகாரத் துறை மற்றும் குற்றவியல் பாதுகாப்பு விவகாரத் துறை இடையேயான கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Indian Workers | Kuwait Police | Fake Hospital
நேரம் அதிகாலை 02:37...இந்தியா மாதிரி கிடையாது இந்த ஊர்,துபாய் வாழ் இந்தியப் பெண் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
Image: வீடியோ வெளியிட்ட இந்திய பெண்
பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் இந்த காலகட்டத்தில், ஒரு பெண் இரவில் பயமின்றி சாலையில் தனியாக நடக்க முடியுமா...? இந்திய சூழலில் இது எளிதான காரியம் அல்ல. ஆனால் துபாய் உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு இளம் இந்திய பெண்ணின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அதிகாலை 2.30 மணிக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த வீடியோ, துபாயில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதத்தைத் தொடங்கியுள்ளது. அதிகாலையில் துபாய் நகரத்தின் வழியாக ஒரு இந்தியப் பெண் தனியாக நடந்து செல்லும் வீடியோ இதுவாகும். துபாய் உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும் என்பதற்கு சான்றாக இந்த வீடியோவை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். இந்த வைரல் வீடியோவில் உள்ள பெண்ணின் த்ரிஷா ராஜ் என்பதாகும்.
அந்த வீடியோவில், த்ரிஷா அதிகாலை 2:30 மணிக்கு துபாய் தெருக்களில் தனியாக நடப்பது எப்படி பாதுகாப்பாக உணர்ந்தேன் என்று பேசுகிறார். வீடியோவில் இப்போது அதிகாலை 2.37 மணி என்றும், சாலையில் தனியாக நடந்து வருவதாகவும் கூறுகிறார். உலகிலேயே துபாயில் மட்டுமே இது சாத்தியம் என்றும், துபாய்க்கு வாருங்கள் என்றும் அந்தப் பெண் வீடியோவில் கூறுகிறார். இங்கு பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் த்ரிஷா கூறுகிறார்.
துபாயில் பெண்களின் பாதுகாப்பை தனது சொந்த நாடான இந்தியாவுடன் ஒப்பிட்டு விளக்குகிறார் த்ரிஷா ராஜ். இந்தியாவில், இதுபோன்ற நேரங்களில் தனியாக வெளியே செல்வது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஆண்களின் துணை பொதுவாக தேடவேண்டியது அவசியம். ஆனால் துபாய் இதிலிருந்து வித்தியாசமான சூழ்நிலையைக் காட்டுகிறது என்று அவர் கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக வைரலானது. உலகில் வெவ்வேறு நகரங்களில் உள்ள பாதுகாப்பு குறித்து அந்தந்த நாடுகளில் வசிக்கின்ற பலரும் தங்கள் அனுபவங்களைப் பற்றி பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே துபாயின் பாதுகாப்பைப் பாராட்டி பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
Indian Girl | Dubai Road | Girl Safety
Till now, we were covering news and updates from Kuwait, from now on we are widening our area to all over the GCC. This new modification has been made to covering all GCC news under one domain arabtamildaily.com. We continue to look forward to the support we have received so far from our readers. Also follow us on Linktree
To advertise with us contact on "+919486443352" or drop an email to "editoratdnews@gmail.com"